பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

திருக்குறள்



தம்மைத் துன்புறுத்தும் குணமுடைய மிகவும் கொடியவரிடத்தும் அவர் புரியும் குற்றத்தைப் பொறுத்துக் கண்ணோட்டம் உடையவராய் இருத்தலே தலைசிறந்த குணம் ஆகும்.

ஒறுத்தாற்றுதல்-துன்புறுத்தல்; பொறுத்து ஆற்றும் பொறுமையோடு இருந்து கண்ணோட்டம் புரியும். 579

10.பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

எல்லாராலும் விரும்பத் தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர். தம் கண்களுக்கு எதிரிலே மதிக்கத் தக்க ஒருவர் விடத்தினைக் குவளையில் பெய்து உண்ணும்படி தம்மை வேண்டிக் கொண்ட போதும், அந்த வேண்டுதலை எப்படி மறுப்பது என்று எண்ணி, அவர் தந்த விடத்தை உட்கொண்டு அவரிடம் மன அமைதியோடு இருப்பர்.

நஞ்சு-விடம்; அமைவர்-மன அமைதியோடு இருப்பர்; நயத்தக்க-பலராலும் விரும்பத்தக்க; நாகரிகம்-மரியாதை, கண்ணோட்டம், தாட்சண்யம். 580

59. ஒற்றாடல்


1.ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

ஒற்றரும் புகழமைந்த நீதி நூலும் ஆகிய இவை இரண்டனையும் அரசன் தன் இரண்டு கண்களாகத் தெளிதல் வேண்டும்.

ஒற்றன்-பகைவர், அயலார், நண்பர் என்னும் மூன்று வகையினரிடத்தும் நிகழும் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு அரசனால் அனுப்பப்படும் வேவுகாரன்; ஒற்று- உளவு; இங்கே உளவறிந்து சொல்லும் ஒற்றனைக் குறிக்கும்; உரைசான்ற-புகழ் அமைந்த; தெற்றென்க-தெளிக.

ஒற்று ஊனக்கண்ணும், உரைசான்ற நீதிநூல் ஞானக் கண்ணும் ஆகும் என்க. 581