பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊக்கம் உடைமை

155



10.சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தா னாகும் மறை.

ஒற்றர்கட்குச் செய்யும் சிறப்புக்களைப் பலரும் அறியும் வண்ணம் வெளிப்படையாகச் செய்தல் கூடாது. அப்படிச் செய்தால் அந்த அரசன் தன் இரகசியச் செய்திகளைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

சிறப்பு-பரிசு, பட்டம் முதலியன அளித்தல்; புறப்படுத்தான்- பலரும் அறியச் செய்தவன்; மறை-இரகசியச் செய்திகள். 590

60. ஊக்கம் உடைமை


1.உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.

ஒருவர் 'உடையவர்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதற்கு உரியதாய் இருப்பது ஊக்கம் என்பதே ஆகும். அந்த ஊக்கம் என்பதை ஒருவர் பெற்றில்லாமல், வேறு எதைப் பெற்றிருந்தாலும் பெற்றிருப்பவர் ஆக மாட்டார்.

உடையவர்-பெற்றிருப்பவர்; ஊக்கம்-மனச் சோர்வு இல்லாமல் உள்ளக் கிளர்ச்சியோடு ஒரு வேலையைச் செய்வதற்கு ஏற்றதாய் இருக்கும் தன்மை. 591

2.உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

ஒருவருக்கு ஊக்கம் என்னும் உள்ளக் கிளர்ச்சியே உடைமையாகும். பொருள் உடைமை நிலை பெற்று இராது, நீங்கிப் போய்விடும்.

உள்ளம்-மனம்; இங்கே உள்ளத்திலிருந்து உண்டாகும் மயக்கம் என்னும் குணத்தைக் குறிக்கும். 592

3.ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.