பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

திருக்குறள்



61. மடி இன்மை


1.குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்

ஒருவன் பிறந்த குடும்பமாகிய மங்காத விளக்கு அவனுடைய சோம்பலாகிய மாசு மேல் படிய ஒளி மங்கி முடிவில் அணைந்து போகும்.

குடி-குடும்பம்; குன்றா விளக்கம்-மங்காத ஒளி விளக்கு, குறைவில்லாத ஒளி; மடி-சோம்பல்; மாசு-குற்றம், புகை, சிட்டம் முதலியன; ஊர-மேன்மேல் படிய; மாய்தல்-அழிதல். 601

2.மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்

தாம் பிறந்த குடும்பத்தை மேன்மேலும் சிறப்புடைய குடும்பமாகச் செய்ய விரும்புகின்றவர், சோம்பலைச் சோம்பாமல் ஒழிக்க முயலுதல் வேண்டும்.

மடி-சோம்பல்; மடியா-சோம்புதல் இல்லாமல்; 'மடியா’ என்பதற்கு மடித்து அல்லது கெடுத்து என்றும் பொருள் கூறலாம்: ஒழுகல்-நடத்துவாராக; குடியாக-சிறந்த குடும்பமாக. 602

3.மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து

சோம்பலைத் தன்னிடம் கொண்டு ஒழுகும் அறிவில்லாதவன் பிறந்த குடும்பம் அவன் அழிவதற்கு முன்னதாகவே அழிந்து விடும்.

மடிமடிக் கொண்டு-சோம்பலைத் தன் மடியில் கொண்டு; பேதை-அறிவில்லாதவன். 603

4.குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு

சோம்பலில் ஆழ்ந்து சிறந்த முயற்சி இல்லாதவராய் இருந்து வருபவர்க்குத் தம் குடும்பத்தின் பெருமை அழிந்து, குற்றமும் அதிகப்படும்.

மடிதல்-அழிதல், ஆழ்தல்;மாண்பு-சிறந்த; உஞற்று இலவர்க்கு-முயற்சி இல்லாதவர்க்கு. 604