பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மடி இன்மை

159



5.நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

விரைந்து செய்ய வேண்டியதை நீடித்துச் செய்தலும், மறதியும், சோம்பலும், அளவுக்கு மீறிய துாக்கமும் ஆகிய இந்த நான்கு குணங்களும் கெட்டு அழியும் தன்மை வாய்ந்தவர்கள் விரும்பி ஏறும் மரக்கலமாகும்.

நெடுநீர்-காலம் நீடித்துச் செய்யும் குணம்; கெடுநீரார்-கெட்டு அழியத் தக்க தன்மை வாய்ந்தவர்: காமம்-விருப்பம்; கலம்-மரக்கலம், கப்பல்.

'காமக்கலன்’ என்பதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம்’ என்றும் பொருள் கூறுவர். 605

6.படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

இந்தப் பெரிய உலகத்தையே தமக்கு உரிமையானதாக உடைய ஒரு பேரரசரின் உறவு வலிய வந்து சேர்ந்த காலத்திலும், சோம்பலையுடையவர் அந்தச் சேர்க்கையினால் சிறந்த பயனை அடைதல் அரிது.

படி-பூமி; பற்று-உறவு (செல்வம் என்றும் பொருள்); மாண்பயன்-பெரும் பயன்; எய்தல்-அடைதல்.

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் என்பதற்கு இந்த உலகம் முழுவதும் ஒரு குடையின் கீழ் வைத்து ஆண்ட அரசரது செல்வம் தாமே வந்து சேர்ந்தாலும் என்றும் பொருள் கூறலாம். 606

7.இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.

சோம்பியிருத்தலை விரும்பிச் சிறந்த முயற்சியைப் புரியாதவர் பிறர் இடித்துக் கூறி இகழ்ந்துரைக்கும் சொல்லையும் கேட்பதற்கு உரியவராய் இருப்பர்.

இடிபுரிதல்-இடித்துக் கூறுதல், கண்டித்துக் கூறுதல்: எள்ளுஞ் சொல்-இழி சொல். 607