பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 நீத்தார் பெருமை

7


உரன்-மன உறுதி; அறிவு எனினுமாம்; தோட்டிஅங்குசம்; வரன் - உயர்வு; வைப்பு- நிலம். 24

5. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலும் கரி.

ஐந்து ஆசைகளையும் அடக்கியவன் வல்லமைக்கு, இடம் அகன்ற தேவலோகத்தை ஆட்சி புரியும் இந்திரனே சிறந்த உதாரணமாக விளங்குகின்றான். தவத்திற் சிறந்தவர்க்குத் தேவேந்திர பதவியும் எளிதில் கிடைக்கும். 25

6. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.

ஐம்பொறிகளின் வழியாக வரும் ஆசையினை அடக்குதல் போன்ற செய்தற்கு அருமையான செயல்களைச் செய்வோர் பெரியோர் ஆவர். செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்யாதவர்கள் துறந்தோர் என்று சொல்லிக்கொண்டு இருப்பினும் சிறியோரே ஆவர். 26

7. சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தின் மூலமாகத் தொட்டறிதல், சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல் என்னும் ஐந்து ஆசைகள் தோன்றுகின்றன. இந்த ஐந்து ஆசைகளாலும் வரும் நன்மை தீமைகளை யறிந்து, அவைகளை அடக்கி ஆள வல்லவனிடமே இவ்வுலகம் அடங்கிக் கிடக்கிறது. இந்த உலகத்தால் அடையவேண்டிய நற்பயனை அவனே அடைய வல்லவன். 27

8. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.

துறவிகள் அறிவு நிறைந்த மொழிகளையுடையவர்கள். இவ்வுலகில் அவர்களால் இயற்றப்பட்டுள்ள சிறந்த அறிவு நூல்களே அவர்கள் பெருமையை நன்கு விளக்கிக் காட்டி விடும்.

மறை மொழி-அறிவு நூல். மந்திர நூல், வேத நூல் என்றும் பொருள் கூறுவர். 28