பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இடுக்கண் அழியாமை

163


 உள்ளத்திலும் சோர்வு இல்லாமல், முயற்சியிலும். குறைவு இல்லாமல் ஒரு செயலைச் செய்ய முய்ல்கின்றவர், அச்செயலுக்கு இடையூறாகத் தோன்றும் விதியையும். புறமுதுகு காட்டும்படி செய்வர்.

உப்பக்கம் காணுதல்-புறமுதுகிட்டு ஒடும்படி செய்தல். 620

63. இடுக்கண் அழியாமை


1.இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்.

இடையூறு நேரும் போது, அதன் பொருட்டுத் தளர்ச்சியடையாது உள்ளத்தே மகிழ்ச்சி அடைதல் வேண்டும். ஏனெனில், அந்த இடையூற்றினை நெருங்கி எதிர்ப்பதற்கு, அந்த மகிழ்ச்சியைப் போன்று வேறு ஒன்றும் இல்லை.

இடுக்கண்-துன்பம்; நகுதல்-சிரித்தல், மகிழ்தல்; அடுத்து ஊர்தல் -நெருங்கி எதிர்த்தல்.

மகிழ்வதனால் மனத்தளர்ச்சி குறைகின்றது; அதனால் நடையுற்ற தொழிலைச் செய்து வெற்றி பெறுவதற்கும் வழி ஏற்படுகின்றது. 621

2.வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

வெள்ளம்போல் அளவின்றி வரும் துன்பங்களையெல்லாம் அறிவுடைய ஒருவன் தன் உள்ளத்தில் அவை வந்த தன்மையினைச் சிறிது நினைத்துப் பார்க்க, உடனே அத்துன்பங்கள் நீங்கி விடும்.

இடும்பை-துன்பம்; உள்ள-நினைத்துப் பார்க்க. 622

3.இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

துன்பம் நேர்ந்த போது அதற்காக வருந்தி உள்ளம் கலங்காதவர், அந்தத் துன்பத்துக்கே துன்பத்தை உண்டாக்குவர்.

படுத்தல்-உண்டாக்குதல்; படுதல்-அனுபவித்தல். 623