பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இடுக்கண் அழியாமை

165



இலக்கம்-குறிப்பொருள், இலட்சியம்; ஒன்றைச் செய்தற்கு இடமாகக் குறித்துக் கொள்வது; கையாறு-ஒழுக்க நெறி, நடக்க வேண்டிய வழி. 627

8.இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

இன்பம் அனுபவிக்கும் போது அதற்காக மகிழாமல், துன்பம் நேர்ந்த போதும் உடம்பைப் பெற்றவர் துன்பம் அடைதல் இயற்கை என்று தெளிந்திருப்பவன் துன்பம் அடைய மாட்டான். 628

9.இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

இன்பத்தில் உள்ள இனிமையினை நினைத்து இன்புற விரும்பாதவன், துன்பத்துள் உள்ள துயரினையும் நினைத்து வருந்த மாட்டான். உடம்பைப் பெற்ற இவ்வுயிருக்கு இவை இரண்டும் இயல்பே என்று எண்ணி, அமைதியாக இருப்பான். 629

10.இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

துன்பத்தையே ஒருவன் இன்பமாகக் கருதிக் கொள்வானானால், அவனுடைய பகைவரும் விரும்பிப் போற்றும் மதிப்பு அவனுக்கு உண்டாகும்.

இன்னாமை-துன்பம்; ஒன்னார்-பகைவர். 630