226
திருக்குறள்
85. புல்லறிவாண்மை
1.அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு.
ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இயலாமையாவது அறிவில்லாமையே ஆகும். மற்றைப் பொருள் இல்லாமையோ என்றால் அதனை இல்லாமையாக அறிவுடையோர் கொள்ள மாட்டார்கள்.
இன்மை - இல்லாமை, வறுமை; உலகு - உலகத்தில் உள்ள அறிவிற் சிறந்த மக்கள்; புல்லறிவு - சிற்றறிவு, அற்ப அறிவு ; ஆண்மை - ஆளும் தன்மை. 841
2.அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம்.
அறிவில்லாதவன் உள்ளம் மகிழ்ந்து ஒருவனுக்கு ஒரு பொருளைக் கொடுத்தல் என்ன காரணம் பற்றியோ எனில், அஃது அந்தப் பொருளைப் பெறுகின்றவன் செய்த நல்வினையின் பயனே ஆகும்; வேறொன்றுமில்லை.
தவம்-முற்பிறப்பில் அல்லது இப்பிறப்பில் செய்த நல்ல செயல்கள், நல்வினை. 842
3.அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பிழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
அறிவில்லாதவர் என்று சொல்லத்தக்க புல்லறிவாளர் தாமே வருந்திக் கொள்ளும் வருத்தத்தை அவர் தம் பகைவராலும் அவருக்குச் செய்ய முடியாது.
பீழித்தல்-துன்புறுத்தல்; பீழை-துன்பம்; செறுவார்-பகைவர். 843
4.வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், 'யாம் அறிவுடையோம்’ என்று ஒருவன் தன்னைத் தானே மதித்துக் கொள்ளும் அகந்தையே ஆகும்.
வெண்மை-புல்லறிவு, அறிவின்மை; ஒண்மை-அறிவுடைமை; செருக்கு-அகந்தை, கர்வம். 844