பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகைமாட்சி

233



6.காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.

தன் நிலையையும், பிறர் நிலையையும் எண்ணிப் பாராமல் பிறரைக் கோபிக்கும் குணமுடையவனும், அளவுக்கு விஞ்சிய காமத்தை உடையவனும் ஆகிய ஒருவனது பகைமை பகைவரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும்.

காணா-எண்ணிப் பாராத; கழி-மிகுதி; கழி பெருங் காமம்-மிகப் பெரிய ஆசை; பேணாமை-பகைமை;: பேணுதல்-விரும்புதல். 866

7.கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.

தமக்கு மிகவும் நெருக்கத்தில் இருந்தும் (தன் பாதுகாப்புக்குத் தேவையானவற்றைச் செய்து கொள்ளாமல்) சிறிதும் பொருந்தாச் செயல்களையே செய்கின்ற ஒருவனது பகையைப் பொருள், நாடு முதலியனவற்றைக் கொடுத்தேனும் தாம் நிச்சயமாகக் கொள்ளுதல் வேண்டும். 867

8.குணன்இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனன்இலனாம் ஏமாப் புடைத்து.

ஒருவன் குணமில்லாதவனாய்ப் பலப் பல குற்றங்களையும் உடையவனாக இருப்பின், அவன் துணை இல்லாதவன் ஆவான். அந்தத் துணையற்ற நிலை பகைவர்க்குத் தக்க பாதுகாப்பாக இருக்கும்.

ஏமாப்பு-பாதுகாப்பு, அஃதாவது பகைவர்க்கு நல்ல வாய்ப்பு. 868

9.செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.

போர் புரிதற்கு வேண்டிய அறிவு இல்லாதவராய், பகைவரைக் கண்டு அஞ்சத் தக்க குணமும் உடையவராய் இருப்போரைப் பகைவராகப் பெற்றால், அவரை எதிர்ப்போர்கட்கு வெற்றி இன்பம் தொலைவில் இராமல் அருகிலேயே நிலைத்திருக்கும். 869


தி.-16