பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒழிபியல்

96 .குடிமை


1.இற்பிறந்தார் கண்ணல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.

நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் அல்லாமல் பிறரிடம் நடு நிலைமை, நாணமுடைமை ஆகியவை ஒருசேர இயல்பாக அமைவதில்லை.

இல் பிறந்தார்-நல்ல குடும்பத்தில் பிறந்தவர்; இயல்பு-எந்த நூலையும் கற்காமலிருந்தும், பிறர் சொல்லக் கேளாமல் இருந்தும், குடும்பக் கால் வழியாக இயற்கையாக அமையும் குணம்; செப்பம்-நடு நிலைமை; நாணம்-செய்யத் தகாத ஒன்றைச் செய்யத் தயங்கும் குணம்; ஒருங்கு-ஒரு சேர, ஒன்றாக.

குறிப்பு: ஒழிபியல் நூலின்கண் முன் இயல்களில் சொல்லாது ஒழிந்தவற்றைக் கூறும் இயல். மணக்குடவரும் பிறரும் இதனைக் குடியியல் என்பர். குடி இயலாவது அரசரும் அமைச்சரும் வீரரும் அல்லாத மக்களது இயல்பு கூறுதல் என்பர் மணக்குடவர். 951

2.ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.

உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் ஒழுக்கம், மெய்ம்மை, நாணம் ஆகிய இம்மூன்று குணங்களிலிருந்தும் தவற மாட்டார்கள். 952

3.நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.

முகமலர்ச்சி, கொடுக்குங் குணம், இனிய சொல், பிறரை இகழ்ந்து பேசாமை ஆகிய நான்கும் உண்மையான நல்ல குடும்பத்தில் பிறந்தவர்க்கு உரிய கூறுபாடுகள் என்று நல்லோர் சொல்லுவர். 953