பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மானம்

261



மானம்-'எக்காலத்தும் தமது நிலையில் திரியாமை’ என்பர் மணக்குடவர்; 'எந்தக் காலத்தும் தம் நிலையில் தாழாமையும், தெய்வத்தால் தாழ்வு நேர்ந்த போது உயிர் வாழாமையும்' என்பர் பரிமேலழகர். 961

2.சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

மிகுந்த சிறப்பினையும், பேராண்மையினையும் விரும்புகின்றவர் செல்வம் முதலிய பெருமைகள் ஏற்படுமாயினும், புகழைத் தாராத இழிந்த செயல்களைச் செய்ய மாட்டார்.

சீர்-சிறப்பு, புகழ், செல்வம்; பேராண்மை-மிகுந்த ஆண்மை.

'சீரினும் சீர் அல்ல செய்யார்’ என்னும் சொற்றொடருக்குப் பரிமேலழகர் 'புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார் 'என்று பொருள் கொள்கின்றார். இதே தொடருக்கு மணக்குடவர் ‘தமக்குப் பொருள் மிகுதி உண்டாயினும், நிகரல்லன செய்யார்’ என்று பொருள் கொள்கின்றார். 962

3.பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

நல்ல குடியில் பிறந்தவர் நிறைந்த செல்வம் பெற்ற போது எல்லாரிடமும் பணிவாக இருத்தல் வேண்டும்; செல்வம் குறைந்து சுருங்கிய காலத்தில் அவர் (தம்மைத் தாழ்த்திக் கொள்ளாமல்) தம் குடிப்பிறப்பின் உயர்வைக் காப்பாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

பெருக்கம்-செல்வம், பதவி முதலியன உயர்ந்து இருக்கும் சிறந்த நிலை; சிறிய சுருக்கம்-செல்வம், பதவி முதலியன மிகவும் சுருங்கிய வறுமைக் காலம். 963

4.தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

மக்கள், தங்கள் உயரிய நிலையிலிருந்து தாழ்ந்த நிலையை அடையும் போது தலையிலிருந்து நீங்கிய மயிரைப் போன்று இகழப்படுவார்கள்.