264
திருக்குறள்
98. பெருமை
1.ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.
ஒருவனுக்குப் பெருமதிப்பாவது செயற்கரிய செயலைச் செய்ய எண்ணும் ஊக்க மிகுதியே ஆகும்; ஒருவனுக்கு இழிவானது அந்த ஊக்க மிகுதி இல்லாமலேயே உயிர் வாழலாம் என்று எண்ணுதலேயாகும்.
உள்ள வெறுக்கை-ஊக்க மிகுதி; அஃது இறந்து அந்த ஊக்க மிகுதி நீங்கி; வாழ்தும்-வாழலாம்; எனல்-என்று எண்ணுதல். 971
2.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆனால் ஒருவன் செய்யும் தொழிலினது உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
ஒக்கும்-ஒத்திருக்கும், ஒரே தன்மையுடையதாக இருக்கும்; சிறப்பு- பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள். 972
3.மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
மேலான இடத்தில் இருந்தாலும், மேன்மைக் குணம் இல்லாதவர் மேன்மக்கள் ஆகார். கீழான இடத்தில் இருந்தாலும் கீழ்மைக்குணம் இல்லாத மேன்மக்கள் கீழ்மக்கள் ஆகார்.
மேல்-மேலிடம், உயர்ந்த பதவி, உயர்ந்த குடும்பம் முதலியன; கீழ் - தாழ்ந்த பதவி, தாழ்ந்த குடும்பம். 973
4.ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
ஒரே மன உறுதியோடுள்ள கற்புடைய மகளிர் போல ஒருவன் தன் ஒழுக்கத்திலே ஒரே மன உறுதியோடு இருந்து தன்னைத்தான் காத்துக் கொண்டு ஒழுகி வருவானாயின், அவனிடம் பெருமைக் குணம் உண்டு.