பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

திருக்குறள்


101. நன்றியில் செல்வம்


1.வைத்தான் வாய்சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.

வீடு முழுதும் நிறைந்துள்ள பெரும் பொருளை ஒருவன் சேர்த்து வைத்திருந்து, அதனை அவன் அனுபவிக்காமல் இறந்து போவானானால், அந்தப் பொருளால் அவனுக்குச் செய்ய முடிந்தது ஒன்றும் இல்லை.

வாய்-இடம், இங்கே இது வீட்டைக் குறிக்கும்; சான்ற-நிறைந்துள்ள; சால்-நிறைதல்; வாய் சான்ற பொருள்- உண்பதற்காகவே தேடிய பெரும் பொருள் எனப் பொருள் கூறுவதும் பொருந்தும்.

குறிப்பு: "அஃது உண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல" என்னும் சொற்றொடருக்கு "அந்தப் பொருளை அனுபவியாமல் அவன் இருந்தானானால், அவன் இறந்தவனுக்கே சமமாவான் ஏனெனில், அவன் அந்தப் பொருளால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை" என்று உரைப்பினும் அமையும். 1001

2.பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

பொருளாலே எல்லாம் முடியக் கூடும் என்று எண்ணிப் பிறருக்குச் சிறிதும் கொடுக்காமல் இருக்கும் கருமித்தனமாகிய மயக்கத்தினால் சிறப்பில்லாத இழிந்த பிறப்பே உண்டாகும்.

ஆம் எல்லாம்-எல்லாம் ஆகும்; ஈயாது-உதவாமல்; இவறுதல்- கருமியாக இருத்தல்; மருள்-மயக்கம்; மாணாப் பிறப்பு- சிறப்பில்லாத இழிந்த பிறப்பு; மருளான் மாணாப் பிறப்பு ஆம் என இயைக்க. 1002

3.ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலைக்குப் பொறை.

பொருளைச் சேர்த்து வைப்பதிலேயே விருப்பங் கொண்டு பிறர்க்கு உதவுவதால் வரும் புகழையும் விரும்பாத மனிதர் பிறந்திருத்தல் பூமிக்கே பாரம் ஆகும்.