பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/286

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

திருக்குறள்



உயிர்களெல்லாம் ஊனாலாகிய உடம்பைத் தமக்கு இருப்பிடமாகக் கொண்டு உள்ளன. அது போலச் சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நற்குணத்தை இருப்பிடமாகக் கொண்டதாகும்.

ஊன்-ஊனாலாகிய உடல்; குறித்த இருப்பிடமாகக் கொண்டன; நன்மை-நல்ல குணம்; சால்பு-மேன்மை.

குறிப்பு: 'ஊனைக் குறித்த' என்றும் பாடபேதம் உண்டு. இதற்கு 'எல்லா உயிர்களும் உணவையே குறிக்கோளாகக் கொண்டு உயிர் வாழ்கின்றன' என்று பொருள் கொள்ளலாம். 1013

4.அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை?

சான்றோருக்கு நாணுடைமையே ஆபரணமாகும்; அந்த நாணம் என்பதை மறந்து பெருமிதத்தோடு நடந்து செல்வது, அந்த நடையைக் கண்டாருக்குப் பிணி போன்றே தோன்றும்.

பீடு நடை-பெருமித நடை, கர்வத்தோடு எவரையும். பொருட் படுத்தாமல் நடந்து செல்லும் நடை.

குறிப்பு: அழகு செய்தலின் 'அணி' என்றும், காண்போருக்குப் பொறுத்தற்கு இயலாத தன்மையில் இருத்தலின் 'பிணி’ எனறும் கூறினார் என்பர் பரிமேலழகர். 1014

5.பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.

பிறருக்கு வரும் பழியையும், தமக்கு நேர்ந்த பழியையும் அஞ்சி நாணுபவர்களை நாணுக்கு ஓர் இருப்பிடம் என்று உலகத்தார் சொல்லுவர்.

உறைபதி-இருப்பிடம்; உலகு-உலகத்தவர்.

தம் பழிக்கு அஞ்சி நாணுதலே அன்றிப் பிறர் பழிக்கும் அஞ்சி நாண வேண்டும் என்பது கருத்து. 1015

6.நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.

மேன்மக்கள் தங்களுக்கு நாணத்தைப் பாதுகாப்பாகக் கொள்வார்களே அன்றி, அதனை ஒழித்து அகன்ற உலகில் வாழ்வதை விரும்ப மாட்டார்கள்.