பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாணுடைமை

277



மேன்மக்கள் நாணத்தை விடுத்து உலகில் வாழ மாட்டார்கள் என்பது கருத்து.

வேலி-பாதுகாப்பு; வியன் ஞாலம்-இடம் அகன்ற உலகம்; பேணலர் -விரும்பார். மன்னும் ஓவும் அசை.

குறிப்பு: நாணத்தைப் பாதுகாப்பாகக் கொள்வதன்றி ஞாலமே பெறக் கூடும் எனினும் மேலோர் விரும்பார் என்று பொருள் கூறுவாரும் உண்டு. 1016

7.நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்

நாண்துறவார் நாணாள் பவர்.

நாணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர், நாணத்துக்காக உயிரை விடுவாரே அன்றி உயிருக்காக நாணினை இழக்க மாட்டார்.

துறத்தல்-இழத்தல், நீங்கியிருத்தல், விடுதல்; நாண் ஆளுதல்- நாணினைத் தம் கொள்கையாகக் கொண்டு ஒழுகுதல்.

நாணம் உயிரினும் சிறந்தது என்பது கருத்து. 1017


8.பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்

அறம்காணத் தக்கது உடைத்து.

பிறர் கண்டு நாணத் தக்க பழியைத் தான் நாணாது செய்வானானால், அச்செயல் அறம் நாணி அவனை விட்டு விலகக் கூடிய குற்றத்தினை உடையதாகும்.

நாணமில்லாதவரிடம் அறச்செயல் சிறிதும் இராது என்பது கருத்து. 1018


9.குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலம்சுடும்

நாணின்மை நின்றக் கடை.

ஒருவன் தன் ஒழுக்கத்திலிருந்து தவறி நடப்பானானால், அஃது அவன் குடிப்பிறப்பின் உயர்வை மட்டும் கெடுக்கும். அவனிடத்தில் நாணமில்லாத தன்மை நிலைபெற்று இருக்குமானால், அஃது அவன் நலன்களையெல்லாம் கெடுத்து விடும்.

குலம்-குடிப்பிறப்பு; சுடுதல்-கெடுத்தல், அழித்தல்; நின்றக் கடை- நிலை பெற்று இருக்குமானால்.

ஒழுக்க அழிவினும் நாண் அழிவு மிகவும் தீயது என்பது கருத்து. 1019