பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 அன்புடைமை

19


8. அன்புடைமை


1.அன்பிற்கு முண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.

எவரும் தம்மிடத்திலுள்ள அன்பினைப் பிறர் அறியாதவாறு மறைத்துத் தாழ்ப்பாள் இட முடியாது. ஒருவர் எவரிடத்து அன்பு கொண்டுள்ளாரோ, அவர் துன்பப்படுவதைக் காணும் போது அன்புடையவருடைய கண்களிலிருந்து நீர் வழியும். அக்கண்ணீரே அவரிடத்துள்ள அன்பைப் பலரும் அறியக் காட்டி விடும். 71

தாழ்-தாழ்ப்பாள்; பூசல் தரும்-வெளிப்படுத்தும்.

2.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்புடையார் பிறர்க்குப் பயன்படுவார்; தமக்கென ஒன்றையும் விரும்பார்; தமது உடம்பும் பிறர்க்குப் பயன் படுமாயின் அவ்வுடம்பையும் அவர்க்கு அளிப்பார். அன்பில்லாதவர் பிறர்க்குப் பயன்படார்; எல்லாப் பொருள்களும் தமக்கு உரியனவென்று கொள்வார்.

என்பு-எலும்பு; (இங்கு எலும்போடு கூடிய உடம்பைக் குறிக்கும்.) 72

3.அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறரிடத்து அன்பாய் இருக்க வேண்டும். மக்கள் அவ்வாறு அன்பு செய்தல் பொருட்டே உயிர் உடலோடு தொடர்பு கொண்டுள்ளது. 73

4.அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

அன்பு பிறரிடத்து விருப்பத்தைத் தோற்றுவிக்கும்; அவ்விருப்பம் எல்லாரும் அவருக்கு நண்பர் என்று சொல்லும்படியான அளவிறந்த சிறப்பையும் அளிக்கும். 74