பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உழவு

281



9.இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.

தன் குடும்பத்துக்கு நேரக் கூடிய குற்றத்தை வரவொட்டாமல் தடுத்து, அதனால் நேரும் துன்பங்களையெல்லாம் தாங்கிக் கொள்ளும் ஒருவனுடைய உடம்பு துன்பத்துக்கே இருப்பிடமான தன்றோ?

இடும்பை-துன்பம்; கொள்கலம்-பண்டம், இடுங்கலம்;. இங்கே இது துன்பங்கள் பலப் பல வந்து தங்கியிருத்தற்கு இடமாக இருக்கும் உடம்பைக் குறிக்கிறது : கொல்லோ-இரக்கக் குறிப்பு; மறைத்தல்- பிறர் மீது தாக்கா வண்ணம் தடுத்து மறைத்துக் கொள்ளல், காத்துக் கொள்ளுல். 1029

10.இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.

குடும்பமாகிய அடிமரம் துன்பமாகிய கோடரியால் வெட்டி வீழ்த்தப் படும்போது குடும்பத் தலைவன் முட்டுக்கால் மரம் போல உடனிருந்து அதனைத் தாங்கிக் கொள்ள வேண்டும். அவ்விதம் அடுத்து இருந்து தாங்கிக் கொள்ளுதற்கு தகுந்த ஒரு நல்ல ஆண் மகன் இல்லாத குடும்பம் அழியும்.

இடுக்கண்-துன்பம்; கால்-அடிமரம், மரத்தின் மூலம்; கொன்றிட- அழிக்க; அடுத்து-அருகே இருந்து; ஊன்றும்-தாங்கிக் கொள்ளும்; நல்லாள்-ஆண் மகன். 1030

104. உழவு


1.சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

உலகத்தவர் பல தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் ஏர் உழுதலைப் புரியும் உழவர் தொழிலையே பின்பற்றி நிற்கின்றனர். அதனால் மிக உழைத்து வருந்த நேர்ந்தாலும் உழுதலைச் செய்யும் உழவுத் தொழிலே சிறந்தது.

சுழன்று-அலைந்து திரிந்து; ஏர்-ஏரையுடைய உழவர்; பின்னது-பின் பற்றி நிற்பர்; உழத்தல்-வருந்துதல். 1031