பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

திருக்குறள்



2.உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

உழவுத்_தொழிலைச் செய்ய இயலாமல் பிற தொழில்களைச் செய்கின்றவர் எல்லாரையும் உழவர் தாங்குதலால், இந்த உலகத்தாராகிய தேருக்கு உழவர் அச்சாணி போன்றவர் ஆவர்.

உழுவார்-உழவர்; ஆணி-அச்சாணி, கடையாணி; ஆற்றாது-செய்ய இயலாமல்; எழுவார்-வேறு தொழில்களைச் செய்யச் சென்றவர்;: பொறுத்தல்-தாங்குதல். 1032

3.உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

எல்லாரும் உண்ணும் படி உழவுத் தொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றவர்களே உரிமையோடு வாழ்கின்றவர் ஆவர்; மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது, அதனால் உண்டு அவர் ஏவியதைச் செய்து, அவரைப் பின் தொடர்ந்து செல்பவரே ஆவர்.

தொழுது உண்ணுதல்-ஏவிய ஏவலைச் செய்து வணங்கி ஊதியம் பெற்று உண்ணுதல்; பின் செல்லுதல்-இடும் தொழிலைச் செய்யப் பின் சென்று காத்துக் கிடத்தல்.

குறிப்பு: உழவுத் தொழில் புரிவதே சுதந்திர வாழ்வு: பிற வாழ்வுகளெல்லாம் அடிமை வாழ்வு என்பது கருத்து. 1033

4.பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

நெற் கதிர்களின் நிழலையே தமக்குடையதாகக் கொண்டு வாழும் உழவர், பல அரசர்களின் குடைக் கீழுள்ள நிலம் முழுவதையும் தம் அரசன் குடைக் கீழ்க் காணச் செய்ய வல்லவர் ஆவர்.

குடை-வெண்கொற்றக் குடை; நீழல்-அரசர்கன் ஆட்சி புரியும் நிலத்தைக் குறிக்க வந்த சொல்; பல குடை நீழல்-பல அரசர்களுடைய குடைகளின் ஆளுகைக்கு உட்பட்ட நிலம்; அலகு -கதிர். 1034