பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உழவு

283



5.இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

கையால் உழுது உண்பதை இயல்பாக உடைய உழவர்,பிறரிடம் சென்று பிச்சையெடுக்க மாட்டார்; அன்றியும் தம்மிடம் வந்து இரந்து கேட்பவர்கட்கு ஒளிக்காமல் அவர் கேட்கும் பொருள் ஒன்றனைத் தருவார்.

இரவார்-பிச்சையெடுக்க மாட்டார்; இரப்பார்-பிச்சை யெடுப்பவர்; கரவாது-ஒளிக்காமல்; கை செய்தல்-கையால் தொழில் செய்தல், இங்கே உழுதல் என்பது பொருள். மாலையவர்-இயல்புடையவர்; மாலை-இயல்பு, 1035

6.உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கு நிலை.

உழவருடைய கை உழவுத் தொழிலைச் செய்யாது, மடங்கியிருக்குமானால், 'பலராலும் விரும்பப்படும் பற்றினையும் விட்டு விட்டோம்' என்று கூறும் துறவிகளுக்கும் அவர்கள் மேற்கொண்ட துறவற நெறியில் நிலைத்து நிற்கும் ஆற்றல் இல்லாதொழியும்.

கைம்மடங்குதல்-தொழில் புரியாமல் கைகட்டிக் கொண்டு இருத்தல்; விழைதல்-விரும்புதல், பற்று; எல்லாராலும் விரும்பப் படும் உணவு என்றும் பொருள் கூறுவர்; நிலை-நிலைத்து இருத்தல். 1036

7.தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

ஒரு பலம் புழுதி, கால் பலம் ஆகும்படி உழவன் நிலத்தினை நன்கு உழுது காய விடுவானானால், ஒரு பிடி எருவும் இல்லாமல் அந்த நிலத்தில் பயிர் செழித்து விளையும்.

தொடி-ஒரு பலம் கொண்ட அளவு; கஃசு-கால் பலம்; உணக்குதல்- உலர்த்துதல்; பிடித்து எரு-ஒரு கைப்பிடி அளவுள்ளதாகிய எரு; சால்படும்-நிறைய விளையும்; படுதல்-முளைத்தல், தோன்றுதல்.

ஒரு பலம் புழுதி கால் பலமாக உலர வேண்டுமானரல் மண் மிக்க மிருதுவாக இருக்க வேண்டும். ஆகவே, அந்த அளவுக்கு நிலத்தை நன்கு உழ வேண்டும் என்பது குறிப்பாக விளக்கப்பட்டுள்ளதை அறிக. 1037