பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

திருக்குறள்



8.ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

ஏர் உழுதலைப் பார்க்கிலும் எரு இடுதல் நல்லது; இவை செய்து களையெடுத்த பின் நீர் பாய்ச்சுவதைப் பார்க்கிலும் பயிர் அழிய வொட்டாமல் அதனைக் காப்பது நல்லது.

கட்டல்-களையெடுத்தல்; காப்பது-பசு, எருது முதலியவை மேயாத படி காவல் காத்தல்.

குறிப்பு: உழுதல், எருவிடுதல், களையெடுத்தல், நீர் பாய்ச்சுதல், காத்தல் ஆகிய இவை ஐந்தும் பயிர் வளர்வதற்கு ஏதுவாகும். 1038

9.செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

நிலத்துக்கு உரியவன் உரிய காலங்களில் எல்லாம் சென்று நிலத்தைப் பார்வையிடாமல் வாளாயிருப்பானானால், அவனுடைய அன்புடன் கூடிய கவனிப்பு இல்லாத அவன் மனைவியைப் போல், அந்த நிலமும் வெறுத்து அவனோடு பிணங்கி விடும்; அஃதாவது நல்ல பலன் தாராது போய் விடும்.

கிழவன்-நிலத்துக்கு உரியவன்; கிழமை-உரிமை; புலத்தல்-வெறுத்தல்; ஊடுதல்-பிணங்குதல்; இல்லாள்-மனைவி.

பிறரை ஏவி விடாது தானே சென்று வயலைப் பார்த்தல் வேண்டும் என்பது கருத்து. 1039

10.இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

'எம்மிடம் சிறிதும் பொருள் இல்லை’ என்று வயலைக் கவனிக்காமல் சோம்பலாக இருப்பவரைக் கண்டால் நிலம் என்னும் பெண், அவருடைய அறிவின்மையை எண்ணி இகழ்ந்து தன்னுள் சிரிப்பாள்.

இலம்-பொருள் பெற்றிலேம்; அசைஇ-சோம்பி; நிலம் என்னும் நல்லாள்-நிலமாகிய பெண்; நிலத்தைப் பெண்ணாக உருவகப் படுத்திக் கூறுகிறார் ஆசிரியர்; நகும்-தனக்குள் சிரித்துக் கொள்வாள்.

பொருள் இல்லாவிட்டாலும், முயற்சி மட்டும் இருந்தால் நிலம் வேண்டிய பலனைத் தரும் என்பது கருத்து. 1040