பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்குரவு

285


105. நல்குரவு


1.இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

வறுமையைப் போலத் துன்பத்தைத் தருவது எது என்று கேட்டால், வறுமையைப் போலத் துன்பத்தைத் தருவது வறுமையே ஆகும்.

இன்மை-வறுமை; இன்னாதது-துன்பந் தருவது; நல்குரவு-வறுமை.

துன்பந் தருவதில் வறுமையை விடக் கொடியது வேறொன்றும் இல்லை என்பது கருத்து. 1041

2.இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.

வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனைப் பற்றிக் கொண்டால் அவனுக்கு இவ்வுலக இன்பம், மறு உலக இன்பம் ஆகிய இரண்டும் இல்லாமற் போய் விடும்.

பாவி-தீமையே செய்பவன்; மறுமை-மறு உலக இன்பம்; இம்மை- இவ்வுலக இன்பம். 1042

3.தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.

நிரம்பப் பொருள் வேண்டும் என்னும் ஆசையால் வந்த வறுமையானது தொன்று தொட்டு வருகின்ற குடிப்பிறப்பின் வரலாற்றையும் அதன் காரணமாக வந்துள்ள புகழ் மொழியையும் ஒரு சேரக் கெடுக்கும்.

தொல்வரவு-குடிப் பிறப்பின் பழைய வரலாறு; தோல்-புகழ் மொழி; தொகையாகக் கெடுக்கும்-ஒருசேரக் கெடுக்கும்; நல்குரவு-வறுமை; நசை-விருப்பம். 1043 .

4.இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

வறுமையானது நல்ல குடிப் பிறந்தாரிடத்தும் இழிவான சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வினைை உண்டாக்கி விடும்.