பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரவு

287



வருவது கொல்லோ: 'கொல்', 'ஓ’ இவை இரண்டும் _அச்சக் குறிப்பைத் தருவன; நெருநல்-நேற்று; கொன்றது போலும்-கொன்றது போன்ற பெருந்துன்பத்தைத் தந்த; நிரப்பு-வறுமை. 1048

9.நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.

ஒருவர் நெருப்பின் நடுவே இருந்து உறங்குதலும் கூடும். ஆனால், வறுமை நிலையில் இருந்து வருந்தும் ஒருவர் எந்த வகையாலும் சிறிது கண்ணை மூடவும் இயலாது.

துஞ்சல்-உறங்குதல்; யாதொன்றும்-எந்த வகையாலும்; கண்பாடு-கண் படுதல், கண் இமையை மூடுதல்; அரிது-அருமையானது. 1049

10.துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

இன்புற்று வாழ்வதற்கு வேண்டிய பொருள்கள் இல்லாத வறியவர் முற்றிலும் துறக்க வேண்டியவராக இருந்தும், துறவாமல் குடும்பத்தில் தங்கியிருப்பதன் காரணம் என்னவென்றால், பிறர் வைத்துள்ள உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

துப்புரவு-இன்புற்று வாழ்வதற்கு வேண்டிய பொருள்கள், ஐம்புல நுகர்ச்சிக்கு வேண்டிய பொருள்கள்; துவர-முற்றிலும்; காடி-கஞ்சி; கூற்று-எமன்.

குறிப்பு; பொருள் தொகுத்து இன்புற்று வாழ இயலாதவர் பிறருக்குத் துன்பந் தாராமல் வீட்டை விட்டுத் துறந்து போதலே நலம் என்பது கருத்து. 1050

106. இரவு


1.இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.

இரத்தற்குத் தகுந்தவரைக் கண்டால் வறியவர் அவரிடம் இரக்கலாம்; இரந்த போது அவர் கொடாமல் மறுப்பாரானால், அஃது அவருக்குப் பழியே அல்லாமல், இரந்தவர்க்குப் பழி அன்று.