பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

திருக்குறள்


8.சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

ஒருவர் தம் குறையைச் சொல்லிய அளவிலேயே, மனம் இரங்கிப் பயன்படுவர் சான்றோர்; மற்றைக் கீழாயினோர் கரும்பினை ஆலையில் வைத்துச் சாறு பிழிவது போல வருத்தினால்தான் பயன்படுவர்.

பயன்படுதல் - உள்ளது கொடுத்தல்; சான்றோர் - மேலாயினார்; கரும்பு போல்-கரும்பை ஆலையில் வைத்துத் சாறு பிழிவது போல; கொல்ல-வருத்த; கீழ்-கீழ்மக்கள். 1078

9.உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

கீழ்மக்கள் பிறர் நன்றாக உடுப்பதையும், உண்பதையும் காணுவார்களாயின் அவற்றைப் பொறாது வேண்டும் என்றே அவர் பால் குற்றம் காண வல்லவர்கள் ஆவார்கள்.

உடுப்பது - நல்ல ஆடை அணிந்து கொள்ளுதல்; உண்பது-நல்ல உணவை உண்டு மகிழ்தல்; வடு-குற்றம்; வற்று-வல்லது. 1079

10.எற்றிற் குரியர்கயவர் ஒன்று உற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து.

கயவர் எதற்கு உரியார் என்றால், தமக்கு ஒரு சிறு துன்பம் நேர்ந்த காலத்தில், அதற்காகத் தம்மை விரைந்து பிறர்க்கு விலைக்கு விற்று விடுவதற்கு உரியவர் ஆவர்.

எற்றிற்கு-எதற்கு; உரியர்-உரியவர்; ஒன்று-ஒரு துன்பம்; உற்றக்கால்-நேர்ந்தபோது. 1080