பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விருந்தோம்பல்

23


விருந்தினரை உபசரித்தலால் ஆகிய பயன் இன்ன அளவினது என்று அளவிட்டுச் சொல்வதற்கில்லை. அவ்விருந்தினரின் குண நலன்களுக்குத் தக்கபடி அந்தப் பயன் விளையும்.

இனைத்துணைத்து - இன்ன அளவினை யுடையது; துணை-அளவு; துணைத்துணை-(குணநலன்களின் அல்லது தகுதியின்) அளவே அளவாகும்; வேள்வி-உதவி. 87

8.பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

விருந்தினரை உபசரித்து, அதனால் ஆகிய பலனை அடைய முயலாதவர்கள் வருந்தித் தேடிப் பாதுகாத்த தம் பொருளை இழந்து, "எத்தகைய ஆதரவும் இல்லாதவராய் இருக்கின்றோம்" என்று சொல்லி வருந்தக்கூடிய நிலையில் இருப்பர்.

பற்றற்றேம்-ஆதரவற்ற நிலையில் இருக்கின்றோம்; விருந்தினருக்கு உதவாத பொருள் தம்மாலும் அனுபவிக்கப் படாமல் தொலைந்து போகும் என்பது கருத்து. 88

9.உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

விருந்தினரை உபசரியாமல் இருக்கும் அறியாமையை உடைய ஒருவன் செல்வத்தைப் பெற்றிருந்தாலும் அச்செல்வம் அவனிடத்து இல்லாமைக்குச் சமமாகும். விருந்தினரை உபசரியாமல் இருக்கும் பேதைமையான செயல் அறிவில்லாதவர்களிடத்திலே இருக்கும். 89

10.மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

அனிச்ச மலரானது மோந்தால்தான் வாடிப் போகும். விருந்தினரின் முகமாகிய மலரோ, முகம் வேறுபாட்டோடு ஒருமுறை நோக்கிய உடனே வாடிப் போய் விடும்.

விருந்தினர் அனிச்ச மலரினும் மென்மையான உள்ளழ் வாய்ந்தவர் என்பது பொருள். 90