பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இனியவை கூறல்

25


ஒருவனுக்கு அழகினை அளிப்பது அவன் பிறரிடம் வணக்கம் உடையவனாகவும், இன்சொல் பேசுபவனாகவும் இருத்தலே ஆகும். இவையல்லாத மற்றவை அவனுக்கு அழகைத் தாரா. 95

6.அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

ஒருவன் பிறருக்கு நன்மை உண்டாகும் சொற்களை ஆராய்ந்து அவைகளை இனிமையான தன்மையில் சொல்லுவானேயானால், அதனால் அவனுக்குத் தீமைகள் குறைய, நன்மைகள் மிகும்.

அல்லவை-நன்மையல்லாதவை, தீமைகள்; அறம்- நன்மையைத் தரும் செயல்கள். சிலர் அறம் என்பதற்குப் புண்ணியம் என்றும், அல்லவை என்பதற்குப் பாவம் என்றும் பொருள் கொள்வர். 96

7.நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

நன்மையும் தந்து, இனிமையான தன்மையிலிருந்தும் நீங்காமலிருக்கும் சொல்லானது அச்சொல்லைக் கேட்போருக்கு நன்மையைத் தருவதோடு, சொல்லுவோனுக்கும் இன்பத்தை அளித்து நன்மையைத் தரும்.

நயன் - நன்மை, இனிமை, இன்பம்; நீதி என்றும் பொருள் கூறுவர்; பயன் ஈன்று-நன்மையைத் தந்து; பண்பு - குணம் (இங்கே இனிமைக் குணம்); தலைப்பிரியா - நீங்காத. 97

8.சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

பிறரால் இகழப்படாத, நன்மையைத் தரத்தக்க, இனிமையான சொற்கள் அவற்றைச் சொல்லுவோனுக்கு இந்தப் பிறவியிலும், இதற்கு அடுத்த பிறவியிலும் இன்பம் தரும்.

சிறுமை-இழிவு; மறுமை-மறுபிறப்பு; இம்மை-இந்தப் பிறப்பு. 98

தி.3