பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

திருக்குறள்


9.இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?

பிறர் கூறும் இனிய சொற்கள் தனக்கு இன்பம் விளைவிப்பதை உணரும் ஒருவன் அத்தகைய இனிமையான சொற்களைச் சொல்லாமல் அவற்றிற்கு மாறாக உள்ள கடுஞ்சொற்களைப் பிறரிடம் வழங்குவது என்ன காரணம் கருதியோ? 99

10.இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

நன்மையைத் தரத்தக்க இனிமையான சொற்கள் இயல்பிலேயே அமைந்திருக்க, அத்தகைய சொற்களைக் கூறாது, தீமையைத் தரத்தக்க இனிமையல்லாத சொற்களைக் கூறுதல் நன்றாகப் பழுத்த பழம் கையிலே இருக்க அவற்றை விடுத்து, மரத்திலே உள்ள காயினைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

இன்னாத-துன்பத்தைத் தரத்தக்க; கவர்தல்-பறித்தல்; அற்று - அப்படிப்பட்டது.

இனிய கனிகள் என்பதற்கு ஒளவையுண்ட நெல்லிக் கனி போல் உண்டாரை நீண்ட நாள் வாழச் செய்யும் அமிழ்த மயமான கனிகள் என்றும், இன்னாத காய்கள் என்பதற்கு உண்டவரைக் கொல்லும் எட்டிக் காய் போன்ற நஞ்சான காய்கள் என்றும் கூறலாம். 100

11. செய்ந்நன்றி அறிதல்


1. செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

தான் எத்தகைய உதவியும் முன்பு செய்யாமலிருக்கத் தனக்கு மற்றொருவன் செய்த உதவிக்குப் பதில் உதவியாக அவனுக்கு இந்த மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் கொடுத்தாலும் அவன் செய்த உதவிக்கு அவை ஈடாக மாட்டா.

செய்ந்நன்றி அறிதல் - தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. 101