பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நடுவு நிலைமை

29


எத்தகைய நற்செயல்களை அழித்துத் தீமைகள் செய்தவர்க்கும் அத்தீமைகளிலிருந்து தப்பிப் பிழைச்க வழி உண்டாகும். ஒருவர் செய்த உதவியை மறந்து, அவருக்குத் துன்பத்தைச் செய்தவனுக்கு அத்துன்பத்திலிருந்து தப்பிப் பிழைக்க வழியே இல்லை.

நன்றி கொன்றார்-நற்செயல்களை அழித்தவர்; உய்வு-தப்பிப் பிழைக்கும் வழி; மகற்கு-மகனுக்கு. 110

12. நடுவு நிலைமை


1.தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

வேண்டியவர், வேண்டாதவர், அயலார் ஆகிய மூவகையினரிடத்தும், ஒருவர் நடுவு நிலைமைக்குரிய முறைமையோடு இருந்து நடப்பதாக இருந்தால், நடுவு நிலைமை என்னும் அந்த ஒன்றே நன்மையைத் தரும்.

தகுதி-நடுவு நிலைமை; பகுதி-அயலார், நண்பர், பகைவர் என்னும் பாகுபாடு; பாற்பட்டு-முறைமையோடு, பொருந்தி; நடுவு நிலைமை- நண்பர், பகைவர், அயலார் எல்லாரிடத்தும் அறத்தில் வழுவாது ஒரே தன்மையாக நடத்தல். 111

2.செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

நடுவு நிலைமை உடையவனது செல்வம் மற்றவர் செல்வம் போல் அழிந்து போகாமல் அவன் சந்ததியாருக்கும் உறுதி தர வல்லது .

செப்பம்-நடுவு நிலைமை; எச்சம்-சந்ததி; சிதைவு-அழிவு; ஏமாப்பு- உறுதி. இன்பம். 112

3.நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.

நடுவு நிலைமை தவறியதால் கிடைத்த செல்வம் தீங்கு செய்யாமல் நன்மையே தருவதாக இருந்தாலும் அது கிடைத்த அப்போதே அதனை ஒழிய விடுதல் வேண்டும். 113