பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

திருக்குறள்


சொற்களின் பயனும் நன்மையைத் தாராமல் போய் விடும். 128

9.தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

நெருப்பிலே சுட்ட புண்ணின் வடு மேலே காணப்பட்டாலும், அப்புண் உள்ளே ஆறி விடும். ஆனால், ஒருவன் உள்ளம் வருந்தும்படி நாவினால் உரைத்த சொல்லால் ஏற்பட்ட மனப்புண் என்றும் ஆறாது நிலைத்து இருக்கும்.

நாவினால் சுடுதல்-கடுஞ்சொற்களைக் கூறி ஒருவன் மனத்தை வருந்த வைத்தல்; வடு-காயம். 129

10.கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

மனத்திலே கோபம் உண்டாகாதபடி காத்துக் கொண்டு, கற்க வேண்டிய நூல்களைக் கற்று, அடங்கி இருக்க வல்லவனை அடைதற்கு உரிய காலத்தை அறக் கடவுள் எதிர் பார்த்து இருக்கும்.

கதம்-கோபம்; செவ்வி-நேரம், காலம்; அறம்-தரும தேவதை, அறக் கடவுள்; ஆறு-வழி; நுழைந்து பார்த்தல்-கூர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல். 130

14. ஒழுக்கமுடைமை


1.ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

ஒழுக்கம் எல்லாருக்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அஃது உயிரினும் சிறந்ததாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒழுக்கம். அறிவிற் சிறந்தோர்களால் ஒப்புக் கொள்ளப் பட்ட நல்ல நடத்தை; விழுப்பம்-மேன்மை, சிறப்பு; ஓம்பப்படும்-பாதுகாக்கப்படும். 131