பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

திருக்குறள்


ஒழுக்கத்திலிருந்து தவறுவதனாலே தமக்குக் குற்றம் உண்டாவதை அறிந்து, அறிவுடையோர் ஒழுக்கத்திலிருந்து தவறாமல், தம்மைக் காத்துக் கொள்வர்.

ஒல்குதல்-சுருங்குதல், குறைதல்; உரவோர்.அறிவுடையோர்; இழுக்கம்-தவறுதல்; ஏதம்-குற்றம்; படுபாக்கு- உண்டாதல். 136

7.ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

நல்ல ஒழுக்கத்தினால் எவரும் மேன்மையை அடைவர்; அவ்வொழுக்கத்திலிருந்து தவறுவதால், அடையத் தகாத பெரிய பழியை அடைவர். 137

8.நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

நல்ல ஒழுக்கம் இன்பமான இல்லற வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும். தீய ஒழுக்கம் பாவத்துக்குக் காரணமாக இருந்து, எப்போதும் துன்பத்தைத் தரும். 138 .

9.ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

தீய சொற்களை மறந்தும் தம் வாயால் சொல்லுதல், நல்லொழுக்கமுடையவர்களுக்கு இயலாது. 139 .

10.உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

உலகத்திலுள்ள உயர்ந்த குணமுடைய மக்களோடு சேர்ந்து ஒழுகுதலைக் கல்லாதவர், பல நூல்களைக் கற்றிருந்தும் அறியாதவர்களே ஆவர்.

உலகம்-உயர்ந்த குணமுடைய மக்கள்; ஒட்ட ஒழுகல் கல்லார்-சேர்ந்து பழக அறியாதவர். 140 ,