பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழுக்காறாமை

43


4.அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

தவறான வழியில் நடப்பதால் துன்பம் உண்டாதலை அறிந்து அறிவுடையோர் (தவறான வழியாகிய) பொறாமையினாலே அறச்செயல் அல்லாத தீய செயல்களைச் செய்யா.

அழுக்காறு-தவறான வழி; ஏதம்-துன்பம்; படுபாக்கு-படுதல், உண்டாதல். 164

5.அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.

பொறாமை உடைய ஒருவரைத் துன்புறுத்த அவரிடமுள்ள பொறாமைக் குணம் ஒன்றே போதும். பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும், பொறாமைக் குணம் தன்னை உடையவருக்குக் கேட்டினைத் தவறாது புரியும். 165

6.கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பிறருக்குக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப் படுகிறவனுடைய குடும்பமும், அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களும் உடுப்பதற்கு உடையும், உண்பதற்கு உணவும் இல்லாமல் அழிந்து ஒழிவர்.

சுற்றம்-ஒருவன் குடும்பமும், அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களாகிய ஏவலாளர், நண்பர், உறவினர் முதலிய அனைவரும்; உடுப்பது-உடுத்திக் கொள்ளத்தக்க உடை; உண்பது-உண்ணத்தக்க உணவு. 166

7.அவ்வித்து அழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

பொறாமையுடைய ஒருவனிடத்துத் திருமகள் இருக்கப் பொறாள். ஆதலால், அவள் தனக்கு மூத்தாளாகிய மூதேவிக்கு அவனைக் காட்டித் தான் நீங்கி விடுவாள்.

அவ்வித்து- மனம் பொறாமல்; செய்யவள்-திருமகள்; தவ்வை-திருமகளுக்கு மூத்தவள் மூதேவி. 167