பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

திருக்குறள்


என்ற காரணத்தால் அதனை நியாயமற்ற முறையில் பெறுவதற்கு விரும்ப மாட்டார்.

இல - இல்லாதவராக இருக்கின்றோம்; புலன்-ஐம்புலன்; புன்மை-குற்றம்; காட்சி- அறிவு. 174

5.அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

எத்தகையவரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாத செயல்களை ஒருவன் செய்வானேயானால், அவனுடைய கூர்மையும், விசாலமும் பொருந்திய அறிவினால் என்ன பயன்?

அஃகி- கூர்மையுடையதாகி; அகன்ற அறிவு-(பல நூல்களையும் கற்றதால் உண்டான) விரிந்த அறிவு. 175

6.அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

கருணையை விரும்பி அதைப் பெறுதற்குரிய நன்னெறியில் ஒழுகுகின்றவன், பிறனுடைய பொருளை விரும்பித் தீய செயல்களைச் செய்ய எண்ண, அதனால் தன் அருட்குணத்தை இழப்பான். 176

7.வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

பிறர் பொருளை விரும்பிக் கவர்ந்து கொள்ளுதலினாலே உண்டாகும் செல்வத்தை விரும்பாது இருக்க வேண்டும். ஏனென்றால் அது பயன்படும் போது அப்பயன் நமக்கு நல்லதாக இருப்பது அரிது.

ஆம்-ஆகின்ற; விளைவயின்-பயன்படும் காலம்; ஆம்பயன்- ஆகும் பயன்; மாண்டதற்கு-மாட்சிமைப்படுதற்கு; அரிது- அருமையுடையது; நல்லதாக இருப்பது அரிது. 177

8.அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

ஒருவன் செல்வம் சுருங்காமலிருப்பதற்கு வழி எதுவென்றால் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலே ஆகும். 178