பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புறங்கூறாமை

47


9.அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் துஆங்கே திரு.

அறம் இது என்று தெரிந்து, பிறர் பொருளை இச்சிக்காத அறிவுடையாரிடம் திருமகள் தானே-தகுதி அறிந்து போய்ச் சேர்வாள். 179

10.இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.

பின் விளைவதை எண்ணாமல், பிறர் பொருளை விரும்பினால் அவ்விருப்பம் ஒருவனுக்கு அழிவைத் தரும்..அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருந்தன்மை வெற்றியைத் தரும். 180

19. புறங்கூறாமை


1.அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.

ஒருவன் அறநெறியைப் படிக்காதவனாய், அறம் அல்லாத பாவச் செயலையே செய்து வருவானாயினும், அவன் மற்றவனைப் பற்றிப் புறங் கூறாமல் இருக்கின்றான் என்று பிறரால் சொல்லப்படுவது நல்லது.

புறங்கூறல்-பிறரை மறைவில் இகழ்ந்து கூறுதல். 181

2.அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

ஒருவனை அவன் இல்லாத இடத்தில் பழித்துக் கூறி, அவனை நேரில் கண்ட போது பொய்யாக நகை செய்தல், அறன் என்பதே ஒன்று இல்லை என்று கூறி, அறம் அல்லாத பாவத் தொழிலைச் செய்தலினும் தீமையைப் பயப்பதாகும்.

அழீஇ-அழித்து; இங்கு மறுத்துரைத்து என்னும் பொருளில் வந்துள்ளது; புறன்-(புறத்தே), காணாத இடத்தில்; அழீஇ-இகழ்ந்துரைத்து; பொய்த்து நகை-பொய்யாகச் சிரித்தல. 182