பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புறங்கூறாமை

49


7.பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

பிறர் மகிழும் வண்ணம் இனிய சொற்களைச் சொல்லி நட்புக் கொள்ளுதல் சிறந்தது என்பதை அறியாதவர், தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறங் கூறி நண்பரையும் பிரித்து விடுவர். 187

8.துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் தூற்றும் பழக்கமுடையவர், பழகாத அயலாரிடத்து உள்ள குற்றத்தை எப்படித் தூற்றாமலிருப்பர்? 188

9.அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறம்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

பிறர் எதிரில் இல்லாதது கண்டு புறங் கூறுவோனுடைய உடலினது சுமையை, நிலமானது இத்தனை கொடியோனையும் தாங்கிக் கொண்டிருத்தலே தனக்கு அறம் என எண்ணிப் பொறுத்துக் கொண்டு இருக்கிறது போலும்.

அறம் நோக்கி - அறநூல்களில் கூறியுள்ள பெருமையை எண்ணிப் பார்த்து; ஆற்றுங்கொல் -பொறுத்துக் கொண்டிருக்கிறது போலும்; பொறை - பாரம், உடற்சுமை. 189

10.ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு?

அயலாருடைய குற்றத்தைக் காண்பது போலப் புறம் கூறுவார் ஒருவர், தம் குற்றத்தையும் காண வல்லவரானால் நிலை பெற்ற உயிர் வாழ்க்கைக்கு என்ன துன்பம் நேர்ந்துவிடும்? (சிறிதும் துன்பம் இராது). 190