பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பயனில சொல்லாமை

51


பயனற்ற சொற்களை நற்குணமுடையவர் கூறுவாராயின், அவருடைய பெருமை அவருக்குரிய மதிப்போடு நீங்கி விடும். 195

6.பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.

பயனில்லாத சொற்களைப் பல முறையும் சொல்லுகின்ற ஒருவனை மக்களுள் ஒருவன் என்று சொல்லுதல் கூடாது. மக்களுள் பதர் என்று சொல்லுதல் வேண்டும். பாராட்டுதல் - பல முறை சொல்லுதல்; பதடி - பதர். 196

7.நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

கல்வி அறிவு ஒழுக்கங்களால் நிறைந்தோர் இனிமையில்லாத சொற்களைச் சொல்ல வேண்டியிருப்பினும் சொல்லக் கடவர். ஆனால், பயனில்லாத சொற்களை அவர் சொல்லாதிருத்தல் நன்மையாகும். சான்றோர் - நற்குணம் பலவும் அமைந்த பெரியோர்; நயன் இல - இனிமையல்லாத சொற்கள். 197

8.அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

அறிதற்கரிய பொருள்களை ஆராயும் அறிவினையுடையவர் மிகவும் பயன் உடையன அல்லாத சொற்களை ஒரு போதும் சொல்ல மாட்டார். 198

9.பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

மயக்கத்திலிருந்து தெளிந்த குற்றமற்ற அறிவினையுடையவர்கள், பயனற்ற சொற்களை ஒருகால் மறந்தும் சொல்ல மாட்டார்கள்.

பொச்சாந்தும் - மறந்தும்; மருள் . மயக்கம்; மாசறு -குற்றம் நீங்கிய; காட்சி - அறிவு. 199