பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தீவினையச்சம்

53


அவ்வாறு எண்ணினால், அறக் கடவுள் அவனுக்குக் கெடுதியை உண்டாக்கும் செயலை எண்ணுவர்.

மறந்தும்-தன்னை அறியாமலும்; சூழற்க-எண்ணாதிருக்க;; அறம்-தரும தேவதை, அறக் கடவுள். 204

5.இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.

தன்னிடம் பொருள் இல்லை என்று எண்ணி ஒருவன் தீய வினைகளைச் செய்தல் கூடாது. அவ்வாறு அவன் செய்வானானால், அதனால் அவன் பொருள் உடையவன் ஆகாமல் மறுபடியும் ஏழையாகவே ஆவான்.

இலன்-பொருள் இல்லாதவன்; பெயர்த்து-மறுபடியும். 205

6.தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

துன்பத்தைச் செய்யும் தீவினைகள் தன்னைத் துன்புறுத்தலை விரும்பாதவன், தான் பிறர்க்குத் தீமையான செயல்களைச் செய்யாதிருத்தல் வேண்டும்.

தீப்பால - தீமையான பகுதிகள்,தீயவைகள்; நோய்ப்பால-துன்பம் செய்யும் பகுதிகள், பாவங்கள்; அடல்-துன்புறுத்தல். 206

7.எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

எத்தகைய பகைமையினையுடையாரும் அப்பகையிலிருந்து தப்பிப் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், தீவினையாகிய பகையோ ஒருவனை நீங்காது தொடர்ந்து சென்று வருத்தும். 207

8.தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.

நிழல் ஒருவனை விடாமல் தொடர்ந்து வந்து அவன் அடியில் தங்கியிருத்தல் போன்று, தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல் நிச்சயம்.