பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈகை

57


10.ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

பிறருக்கு உபகாரம் செய்தலினால் தனக்குத் துன்பம் வருமென்று யாரேனும் சொல்வார்களானால், அந்த உபகாரத்தைச் செய்வதற்காகத் தன்னைப் பிறருக்கு அடிமைப்படுத்தியேனும், அந்த உபகாரச் செயலை மேற்கொள்ளுதல் தகுதியுடையதாகும்.

பிறருக்கு உபகாரம் செய்தலில் எத்தகைய துன்பம் நேர்ந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது செய்தல் வேண்டும். அதுவே இவ்வுலகத்தில் பிறந்ததன் பயனாம். 220

23. ஈகை


1.வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

ஒரு பொருளும் இல்லாத ஏழையாகிய ஒருவருக்கு அவர் வேண்டிய பொருளைக் கொடுப்பதே ஈகையாகும். அவ்விதம் இல்லாத பிற கொடைகளெல்லாம் பிறிதொரு பயனை எதிர்பார்த்துக் கொடுப்பவைகளே.

வறியார் - ஒரு பொருளும் இல்லாதவர், ஏழை; ஈகை- உதவி: குறி யெதிர்ப்பு - பிறிதோர் பயனை எதிர்பார்த்துக் கொடுப்பது;: நீரது - தன்மையை உடையது.

குறிப்பு: ஒப்புரவு என்பது பிறர் நம்மைக் கேளாமல் இருந்த போதும் நம்முடைய கடமையைச் செய்யும் உபகார குணம். ஈகை என்பது இல்லை என்று வந்து கேட்டவர்க்கு இரக்கங்கொண்டு உதவும் குணம். 221

2.நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

பிறரிடமிருந்து ஒரு பொருளைப் பெறுதல் நன்மை விளைவதற்கு வழியாக இருந்தாலும், அது தீயதே ஆகும். பிறருக்கு உதவுவதால் மேலுலகம் இல்லை என்று கூறுவார் உளராயினும் கொடுப்பதே நல்லது. 222


தி..-5