பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்

61


5.நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.

அறிவுடையோர் துன்பம் அடைந்த காலத்திலும், செல்வம் பெற்றவர் போல் வளர்ச்சி பெற்றே விளங்குவர். அவர் இறந்த போது புகழுடம்பு தாங்கி என்றும் இறவாமல் இருப்பார். இத்தகைய தன்மையை மற்றவர்கள் அடைய முடியாது.

நத்தம்-வளர்ச்சி, ஆக்கம்; சாக்காடு-இறப்பு; உளதாகும் சாக்காடு-இறந்தும் இறவாமல் இருப்பது. 235

6.தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

உலகத்தில் பிறந்தால் பிறர் புகழ்ந்து பேசுதற்குரிய சிறப்போடு பிறத்தல் வேண்டும். அவ்விதம் பிறந்து சிறந்து விளங்க இயலாதவர்கள், இவ்வுலகில் பிறக்காமலே இருந்திருந்தால் நலமாக இருக்கும்.

ஓர் இடத்துக்குச் சென்றால் பலரும் புகழும்படியான தன்மையில் செல்லுதல் வேண்டும். தம்மைப் பலரும் இகழும் வகையில் செல்லுதலை விட அவ்விடத்திற்குச் செல்லாமல் இருத்தலே நலம்;என்றும் பொருள் கொள்ளுவர். 236

7.புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்?

தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழ முடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் என்ன பயன்? 237 .

8.வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசைஎன்னும்
எச்சம் பெறாஅ விடின்.

தாம் இறந்த பின்னரும் எஞ்சி நிற்பதாகிய புகழைப் பெறா விட்டால் உலகத்தில் பிறந்த எத்தகையோர்க்கும் அஃது ஒரு பெரிய இகழ்ச்சியாகும் என்று அறிஞர் கூறுவர். 238

.