பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



துறவறவியல்

25. அருளுடைமை'


1.அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

பல வகைப்பட்ட செல்வங்களுள்ளும் அருளுடைமை என்னும் இரக்க குணமே சிறந்த செல்வம் ஆகும். அதுவே உயர்ந்தோர்களிடத்தே காணப்படும் செல்வம். பொருளால் வரும் செல்வங்கள் சாதாரண மக்களிடத்தும் காணப்படும்.

பூரியார்-பொதுமக்கள், கீழ்மக்கள் என்றும் பொருள் கொள்ளலாம். 241

2.நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.

உயிர்களுக்குக் கருணை காட்டும் குணத்தினை நல்ல வழியிலே தேடி அடைந்து கடைப் பிடித்தல் வேண்டும். பலப்பல வகையாலும் ஆராய்ந்து பார்த்தாலும் அவ்வருட் குணமே உயிருக்குத் துணை என்பது தெரிய வருகின்றது .

நல்லாறு_நல்ல வழி;பல்லாற்றல்.பல வழிகளாலும். 242

3.அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை. இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

கருணை நிறைந்த உள்ளம் உடையவர்களுக்கு மயக்கத்தைத் தரக் கூடிய துன்பம் நிறைந்த உலக வாழ்க்கையில் புகுந்து உழலும் நிலை இல்லை.

இருள்-மயக்கம், அறியாமையுமாம்; இன்னா உலகம்-துன்ப வாழ்க்கையோடு கூடிய உலகம். நரகம் என்றும் கூறுவர். 243