பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

திருக்குறள்


4.மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

பிற உயிர்களைக் காப்பாற்றி அருட் குணத்தினை வளர்த்து வருகின்ற ஒருவர்க்குத் தம் உயிர் அஞ்சக் கூடிய செயல் எதுவும் இல்லை.

மன்னுயிர் - உலகத்திலே நிலையாக இருந்து வரும் சீவராசிகள்; ஓம்பி-பாதுகாத்து. 244

5.அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.

அருட்குணம் கை வரப் பெற்றவர்கட்குத் துன்பம் எந்தக் காலத்திலும் இல்லை. காற்று இயங்குகின்ற வளப்பம் பொருந்திய இந்தப் பெரிய உலகத்திலே வாழும் மக்களே அதற்குச் சான்று.

வளி-காற்று; வழங்குதல் - உலாவுதல்; மல்லல்-வளப்பம்; மா-பெரிய; ஞாலம்-உலகம், மக்கள்; கரி- சான்று, சாட்சி. 245

6.பொருள்நீங்கிப் பொச்சார்ந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

கருணை சிறிதும் இன்றிக் கொடுமையான செயல்களைச் செய்து உயிர் வாழ்கின்றவர்கள், தாம் அடைய எண்ணிய பொருள்களை இழந்தவர்களாவார்கள். மேலும், அவர்கள் தாம் அடைய எண்ணிய நன்மைகளையும், மறந்தவரே ஆவர்.

பொருள்-செல்வம், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களுமாம்; பொச்சாத்தல்-மறந்திருத்தல்; அல்லவை -கொடிய செயல்கள். 246

7.அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில்இன்பம் இல்லாதது போல், இரக்க குணம் சிறிதும் இல்லாதவர்களுக்கு மேலுலகத்து இன்பம் இல்லை.

அவ்வுலகம்-மேலுலகம்; வீட்டுலகம். 247