பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

திருக்குறள்


4.மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

பிற உயிர்களைக் காப்பாற்றி அருட் குணத்தினை வளர்த்து வருகின்ற ஒருவர்க்குத் தம் உயிர் அஞ்சக் கூடிய செயல் எதுவும் இல்லை.

மன்னுயிர் - உலகத்திலே நிலையாக இருந்து வரும் சீவராசிகள்; ஓம்பி-பாதுகாத்து. 244

5.அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.

அருட்குணம் கை வரப் பெற்றவர்கட்குத் துன்பம் எந்தக் காலத்திலும் இல்லை. காற்று இயங்குகின்ற வளப்பம் பொருந்திய இந்தப் பெரிய உலகத்திலே வாழும் மக்களே அதற்குச் சான்று.

வளி-காற்று; வழங்குதல் - உலாவுதல்; மல்லல்-வளப்பம்; மா-பெரிய; ஞாலம்-உலகம், மக்கள்; கரி- சான்று, சாட்சி. 245

6.பொருள்நீங்கிப் பொச்சார்ந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

கருணை சிறிதும் இன்றிக் கொடுமையான செயல்களைச் செய்து உயிர் வாழ்கின்றவர்கள், தாம் அடைய எண்ணிய பொருள்களை இழந்தவர்களாவார்கள். மேலும், அவர்கள் தாம் அடைய எண்ணிய நன்மைகளையும், மறந்தவரே ஆவர்.

பொருள்-செல்வம், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களுமாம்; பொச்சாத்தல்-மறந்திருத்தல்; அல்லவை -கொடிய செயல்கள். 246

7.அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில்இன்பம் இல்லாதது போல், இரக்க குணம் சிறிதும் இல்லாதவர்களுக்கு மேலுலகத்து இன்பம் இல்லை.

அவ்வுலகம்-மேலுலகம்; வீட்டுலகம். 247