பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

திருக்குறள்


2.பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

பொருளைக் கருத்துடன் சேமித்து வையாதவர் பொருளால் அடையக் கூடிய பயனை இழந்து விடுவர். அது போல ஓர் உடலைத் தின்பவர் அருளால் அடையக் கூடிய பயனை இழந்து விடுவர். 252

3.படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

கொலைக் கருவியைக் கையில் கொண்டிருப்பவர் மனம் கொலை செய்தலிலேயே செல்லும். நன்மையான செயலைச் செய்வதற்கு அவர் மனம் இடங் கொடாது. அது போல, பிற உயிர்களின் ஊனை உண்டு சுவை கண்டவர்கள், அந்த உயிரின் உடலை உண்டு சுவைக்க விரும்புவார்களே அல்லாமல், அவ்வுயிரின் மீது கருணை காட்ட எண்ண மாட்டார்கள்.

படை-கொலைத் தொழில் புரியும் ஆயுதம்; நன்று ஊக்காது-நன்மையான செயலைச் செய்ய இடந் தராது. 253

4.அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.

அருள் என்பது எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமல் இருத்தல். அருள் அல்லாதது எது என்றால், பிற உயிர்களைக் கொல்லுதல். ஆதலால், கொல்லுதலோடு நிற்காமல் கொல்லப்பட்ட உயிரின் ஊனினையும் தின்னுதல் அறம் ஆகாது.

கோறல்-கொல்லுதல்; பொருள்-அறமாகிய பொருள். 'அருள் யாதெனில் கொல்லாமை, அல்லது யாதெனில் கோறல்’ எனப் பிரித்துக் கொள்க. இத்தொடருக்கு 'இரக்க குணம் இல்லாமை எது என்றால் கொல்லாமை என்னும் குணத்தை அழித்தலே ஆகும்' என்றும் பொருள் கொள்ளலாம். 254

5.உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.