பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலால் மறுத்தல்

67


உயிர்கள் உடம்போடு வாழ்கின்ற தன்மை ஊன் உண்ணாமையாகிய செயலினாலேயே நிலைத்து இருக்கின்றது. ஆதலால், புலால் மறுத்தலை விரதமாகக் கொண்டவனுடைய உயிரை உண்பதற்கு நரகமானது வாய் திறந்து நிற்காது. அண்ணாத்தல்- வாய் திறந்திருத்தல்; அளறு-நரக லோகம். 'ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு' என்னும் தொடருக்கு, 'ஒருவன் ஊன் உண்டால், அவனை விழுங்கிய நரகம் பின் அவனை வெளியே உமிழ்தற்குத் தன் வாயினைத் திறவாது' என்றும் பொருள் கொள்ளலாம். 255

6.தினற்பொருட்டால் கொல்லாது உலகினின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

ஊன் தின்பதற்காக உயிர்கள் கொல்லப்படுகின்றன. உண்பவர் விலை கொடுப்பதால், ஊன் விற்கப்படுகிறது. புலால் தின்பதற்காக உலகத்தவர்கள் உயிர்களைக் கொல்லாதிருப்பார்களானால், ஊனை விலைக்கு விற்பவர்களும் இல்லாமற் போய் விடுவர்.

தினல்-தின்னுதல்; உலகு-உலகத்திலுள்ள மக்கள்; விலைப் பொருட்டால் ஊன் தருவார்-இறைச்சி விற்பவர். 256

7.உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.

புலால் என்பது பிற உயிர்களின் உடம்பில் உள்ள புண்ணேயாகும். புண் என்ற உண்மையை அறியும் அறிவுடையவர்கள் அதனை உண்ணாமல் விலக்குதல் வேண்டும்.

உண்மையுணரும் அறிவில்லாதவரே புலால் உண்பர் என்பதாம். 257

8.செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

குற்றமற்ற அறிவினை உடையவர்கள் தம்மாலோ பிறராலோ கொல்லப்படாமல் இயற்கையிலேயே உயிர் பிரிந்த உடலாக இருந்தாலும், அந்த ஊனையும் உண்ண மாட்டார்கள்.

செயிர்-குற்றம்; தலைப்பிரிந்த-நீங்கிய; காட்சி-அறிவு. 258