76
திருக்குறள்
2.பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
குற்றம் சிறிதும் இல்லாத நன்மையினைப் பிறருக்குத் தருமானால் பொய்யான சொற்களும், மெய்ம்மைச் சொற்களைப் போன்றவையே ஆகும்.
வாய்மையிடத்த-உண்மைக்குச் சமமானவை; புரை தீர்ந்த-குற்றம் நீங்கிய. 292
3.தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
ஒருவன் தன் மனம் நன்றாக அறிந்த ஒன்றை மறைத்து மாற்றிச் சொல்லுதல் கூடாது. அவ்விதம் மறைத்துச் சொன்னால் பிறகு அவன் மனமே அவனை வருத்திக் கொண்டிருக்கும். 293
4.உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
ஒருவன் தன் மனச்சாட்சிக்கு ஏற்பப் பொய் சொல்லாது நடப்பானேயானால், அவன் உலகத்தாரின் உள்ளங்களிலெல்லாம் இருப்பவனாவான். 294
5.மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை.
தன் மனத்திற்கு மாறுபடாமல் ஒருவன் உண்மை பேசுவானேயானால், தவமும், தானமும் ஒருங்கே செய்வோரினும் அவன் சிறப்புடையவனாவான். 295
6.பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.
பொய் பேசாமல் இருத்தலைப் போல ஒருவனுக்குப் புகழைத் தருவது வேறொன்றுமில்லை. அஃது அவனை வருந்தச் செய்யாமல், எல்லா அறங்களையும் அவனுக்கு அளிக்கும். 296