பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாய்மை

77


7.பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

ஒருவன் பொய் பேசாதிருத்தலைத் தவறாமல் செய்து வருவானேயானால், அவன் பிற அறங்களைச் செய்ய வேண்டுவதே இல்லை.

பொய்யாமை (1)-பொய் பேசாமல் இருத்தல்; (2) பொய்யாமை- தவறாமை; “செய்யாமை, செய்யாமை’ - என்பது வற்புறுத்துவதற்கு அடுக்கி வந்தது. 297

8.புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

உடம்பின் வெளிப்புறத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் நீரினால் உண்டாகும். அது போல உடம்பின் உட்புறமாகிய மனத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளும் தன்மை உண்மை பேசுவதால் உண்டாகும். 298

9.எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

ஒருவருடைய பெருமையைப் பலரும் அறிய விளக்கிக் காட்டும் ஒழுக்கம், அறிவு, கல்வி, செல்வம் முதலியன அவருடைய உண்மைச் சிறப்பினை விளக்கிக் காட்டுவன அல்ல; ஒழுக்கத்தால் சிறந்து விளங்கும் பெரியோர்களின் பெருமையைப் பலரும் அறிய விளக்கிக் காட்டும் பொய் பேசாமையாகிய நல்ல பண்பே அவர்களின் உண்மைச் சிறப்பினை விளக்கிக் காட்டுவதாகும்.

எல்லா விளக்கு-ஒருவனுடைய பெருமையினை விளக்கிக் காட்டும் எல்லா நற்பண்புகளும்; பொய்யா விளக்கு - பொய்யாமையாகிய (உண்மைச் சிறப்பினை) விளக்கிக் காட்டும் நல்ல பண்பு. 299

10.யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

யாம் உண்மையாகக் கண்ட பொருள்களில் வாய்மையைக் காட்டிலும் எவ்வகையிலும் சிறந்ததாகக் கூறக் கூடிய பொருள் வேறு ஒன்றும் இல்லையாம். 300