பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

திருக்குறள்


31. வெகுளாமை


1.செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்

காக்கின்என்? காவாக்கால் என்?

தன் சினம் பலிக்கும் இடத்து அந்தச் சினத்தை எழவொட்டாமல் தடுப்பவனே சினத்தைத் தடுத்தவனாவான். தன் கோபம் பலிக்காத இடத்தில், அவன் அக்கோபத்தை எழவொட்டாமல் தடுத்தால் என்ன? தடுக்காவிட்டால் என்ன?

செல்லிடம்-வயது, வலிவு, செல்வாக்கு முதலியவைகளால் தன்னினும் தாழ்ந்தோரிடம்; அல்லிடம்-அல்லாத இடம், தன்னிலும் பலமுடையவரிடம். 301

2.செல்லா இடத்துச் சினம்தீது செல்லிடத்தும்

இல்அதனின் தீய பிற.

தன் கோபம் செல்லாத இடத்தில் கோபம் கொள்வது தனக்குத் தீங்கினை விளைவிக்கும். தன் கோபம் செல்லுகின்ற இடத்திலும் கோபம் கொள்வதைக் காட்டிலும் பெரிய தீங்கு வேறொன்றுமில்லை. 302

3.மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனால் வரும்.

தீமையான நிகழ்ச்சிகளெல்லாம் ஒருவனுக்குக் கோபத்தினாலேயே உண்டாகின்றன. ஆதலால், எத்தகையவரிடத்திலும் நாம் சினம் கொள்வதை மறந்து விடுதல் வேண்டும். 303

4.நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.

முகத்தில் தோன்றும் மலர்ச்சியையும், அகத்தில் தோன்றும் மகிழ்ச்சியையும் அழிக்கின்ற கோபத்தைக் காட்டிலும் வேறு பெரிய விரோதி ஒருவனுக்கு உண்டோ? இல்லை.

நகை-முகத்தின் கண் தோன்றும் மலர்ச்சி; உவகை-உள்ளத்தின்கண் தோன்றும் மகிழ்ச்சி; கொல்லுதல்- அழித்தல். 304