பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

திருக்குறள்


9.உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

ஒருவன் எந்தக் காலத்திலும் கோபத்தைத் தன்னுடைய மனத்தில் நினையாதவனாயிருந்தால், அவன் மனத்தில் எண்ணிய எல்லா நன்மைகளும் உடனே அவனை வந்து அடையும்.

உள்ளியது-எண்ணியது, அஃதாவது எண்ணிய நன்மைகள்; எய்தும்- அடையும்; உள்ளான்-நினைக்க மாட்டான். 309

10.இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

அளவு கடந்த கோபத்தை உடையவர் உயிரோடு இருப்பவராயினும், இறந்தவரைப் போன்றவரே ஆவர். கோபத்தை அடியோடு ஒழித்து விட்டவர் எல்லாவற்றையும் அறவே துறந்த துறவிகளுக்குச் சமமாக இருப்பர்.

இறந்தார் (1)-அளவில் கடந்தவர்; இறந்தார் (2)-செத்தவர்; துறந்தார் (1)-ஒழித்தவர்; துறந்தார்(2)-துறவி. 310

32. இன்னா செய்யாமை


1.சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

பிறருக்குத் துன்பத்தைத் தருவதால், சிறப்பைத் தரத்தக்க செல்வங்களைப் பெறுவதாக இருந்தாலும், அத்தகைய துன்பத்தைச் செய்யாமலிருப்பதே குற்றமற்ற பெரியோர்களது கொள்கை.

சிறப்பு ஈனும் செல்வம்-பெருமையைத் தரும் செல்வம்; மாசற்றார் - குற்றமற்றவர்கள்; கோள் - கொள்கை, துணிவு. 311

2.சுறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.