பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

திருக்குறள்


7.எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணா செய்யாமை தலை.

துன்பம் வரும் செயல்கள் எவ்வளவு சிறியனவாக இருப்பினும், அவற்றை எக்காலத்தும் எவருக்கும் மனத்தினாலும் செய்ய எண்ணாதிருத்தலே சிறந்ததாகும். 317

8.தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.

பிறர் செய்யும் துன்பச் செயல்களால் தன்னுயிர்க்குத் தீங்கு விளைவதை உணர்கின்ற ஒருவன், மற்ற உயிர்க்குத் துன்பங்களைச் செய்தல் என்ன காரணமோ அறிகிலோம். 318

9.பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

பிறருக்குத் துன்பம் தருவனவற்றை ஒருவர் ஒரு நாளின் முற்பகலில் செய்வாரேயானால், அவருக்குத் துன்பம் தருவன அன்று பிற்பகலில் பிறர் செய்யாமல், தாமே அவரை வந்து அடையும்.3 319

10.நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

துன்பங்களெல்லாம் துன்பம் செய்தாரையே வந்து அடையும். ஆதலால், துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர்கள், பிறருக்குத் துன்பம் செய்யமாட்டார்கள். 320

33. கொல்லாமை


1.அறவினை யாதெனில் கொல்லாமை; கோறல்
பிறவினை எல்லாம் தரும்.

அறச்செயல் என்று சொல்லப்படுவது எதுவென்றால், அஃது ஓர் உயிரையும் கொல்லாமல் இருத்தலே ஆகும். கொல்லும் குணமோ அறம் அல்லாத பிற எல்லாத் தீய செயல்களையும் விளைவிக்கும். 321