பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிலையாமை

85


நிலையற்றவைகளை நிலையானவை என்று எண்ணும் சிற்றறிவினை உடையவராயிருத்தல், வாழ்வில் இழிவான நிலைமையாகும்.

நில்லாதவை- அழியக்கூடியவை; நிலையின்-அழியாமல் நிலைத்து நிற்பவை; புல்லறிவு-சிற்றறிவு; கடை-கீழ்ப்பட்ட நிலை. 331

2.கூத்தாட்டு அவைக்குழாத்தற்றே பெருஞ் செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

ஒருவனுக்குப் பெரும் செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் திடும் என மக்கள் ஒன்றாகத் திரண்டு வருதலுக்குச் சமம் ஆகும். வந்த செல்வம் நீங்கிப் போவது கூத்து முடிந்ததும் அக்கூட்டம் உடனே கலைந்து போவதற்குச் சமம் ஆகும்.

கூத்தாட்டு அவை - கூத்துக்கள் ஆடும் நாடக சபை; குழாம்-கூட்டம்; போக்கு-நீங்கிப் போதல்; விளிதல்-கெடுதல், இங்கே கூட்டம் கலைந்து போதலைக் குறிக்கும். 332

3.அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

செல்வமானது நிலைத்து நில்லாத இயல்பினை உடையது. ஆதலால், நாம் அதைப் பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறச் செயல்களைச் செய்தல் வேண்டும்.

அற்கா-நிலையாத; அற்குப-நிலையான அறங்கள்; இயல்பிற்று-இயல்பை உடையது. 333

4.நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.

நாள் என்பது தன்னை ஒரு கால் அளவு போல் நமக்குக் காட்டி, நம் உடலிலிருந்து உயிரினைப் பிரித்து அறுக்கும் வாளாகவே உள்ளது. ஆராய்ந்து அறியும் அறிவைப் பெற்றிருப்பவர்கட்கு இந்த உண்மை விளங்கும். 334

5.நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

பேச முடியாதபடி நாவை அடக்கி, விக்குள் எழுவதற்கு முன்னமே அறச்செயல்களை நாம் விரைந்து செய்தல் வேண்டும். 335