பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துறவு

87


35. துறவு


1.யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

ஒருவன் எந்த எந்தப் பொருளின் மீது தான் வைத்துள்ள ஆசையை நீக்கிக் கொள்கிறானோ, அவன் அந்த அந்தப் பொருளின் காரணமாக வரும் துன்பத்தால் வருந்த மாட்டான்.

யாதனின் யாதனின் - எந்த எந்தப் பொருள்களில்; நோதல்-வருந்துதல். 341

2.வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.

துன்பம் இல்லாத நிலையை ஒருவன் விரும்பினால், அவன் இளமைப் பருவத்திலேயே துறத்தல் வேண்டும். அவ்வாறு அவன் துறப்பானேயானால், அவன் இந்த உலகத்திலேயே பெறக் கூடிய இன்பம் பல உண்டு.

உண்டாகத் துறக்க - நிரம்பப் பொருள்கள் உள்ள காலத்திலேயே, அஃதாவது இளம் பருவத்திலேயே துறக்க; இயற்பால-உண்டாகத் தக்கவை: அடையத் தக்கவை. 342

3.அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.

நிலைத்த இன்பத்தைப் பெற விரும்புவோர் ஐம்பொறிகளின் வழியாக வரும் ஐந்து புலன்களின் ஆசையினையும் அடக்குதல் வேண்டும். ஐந்து புலன்களாலும் அனுபவிக்கக் கூடிய பொருள்களையெல்லாம் அவர்கள் முற்றிலும் நீக்கி விடுதல் வேண்டும். 343

4.இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

தவம் செய்வோர்கட்குப் பற்று உண்டாக்கத் தக்க ஒரு பொருளும் இல்லாது இருத்தல் இயல்பாக வேண்டப்படுவது. அப்பொருள்கள் இருத்தல் மீண்டும் ஆசையை உண்டாக்குவதற்குக் காரணமாயிருக்கும். 344 .

5.மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.