பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

திருக்குறள்


மீண்டும் பிறவாதிருத்தலை விரும்பும் ஒரு துறவிக்கு, இந்த உடம்பே வேண்டாத பொருளாகும். அவ்வாறு இருக்க, மற்றைப் பொருள்களில் ஆசை வைத்து, அவற்றோடு சம்பந்தம் கொள்வது எதற்காக? 345

6.யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

தான் அல்லாத உடம்பைத் தான் என்றும், தனக்கு உரிமையில்லாத பொருளைத் தனது என்றும் எண்ணுகின்ற மயக்கத்தினை ஒழிப்பவன், தேவர்களாலும் அடைய முடியாத மோட்ச வீட்டினை அடைவான். 346

7.பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

யான், எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் உறுதியாக மனத்தில் பற்றிக் கொண்டு விடாமல் இருப்பவர்களை அவை காரணமாக வரும் துன்பங்கள் விடாமல் பற்றிக் கொண்டிருக்கும். 347

8.தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

பற்றுக்களை முற்றிலும் துறந்தவர்கள் மோட்ச லோகத்தை அடைவதற்கு முற்பட்டவராவர். மற்றவர்கள் ஆசை காரணமாக மயங்கித் துன்ப வலையிலே அகப் பட்டவராவர்.

தலைப்படுதல்-முற்படுதல்; தீரத் துறத்தல்-முற்றிலும் பற்றற்று இருத்தல். 348

9.பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.

யான், எனது என்னும் ஆசை நீங்கியவுடனே, அந்தப் பற்றற்ற நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும். அந்தப் பற்றினை நீக்கிக் கொள்ளாதவர்களிடம் பிறப்பும், இறப்பும் ஆகிய நிலையாமையே காணப்படும். 349

10.பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

கடவுள் எந்தப் பொருள்களின் மீதும் ஆசை இல்லாதவர். உயிர்கள் பொருள்களின் மீது ஆசை உடையவை. அந்த ஆசை நீங்க வேண்டுமானால், எந்தப் பொருளின் மீதும் ஆசையில்லாத கடவுளின் மீது ஆசை வைத்தல் வேண்டும். 350