பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யுணர்தல்

89


36. மெய்யுணர்தல்


1.பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

உண்மைப்பொருள் அல்லாதவைகளை, உண்மைப் பொருள் என்று நாம் கருதுகின்றோம்.அவ்வாறு தவறாகக் கருதுகிற மயக்க உணர்ச்சியால், சிறப்பில்லாத துன்பப் பிறப்பு உண்டாகின்றது. 351

2.இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

மயக்கத்திலிருந்து நீங்கிக் குற்றமற்ற மெய்யறிவினை உடையவர்க்கு அந்த மெய்யறிவு அறியாமையாகிய இருளினை நீக்கி அவர்கட்கு இன்பத்தினை அளிக்கும். 352

3.ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

மயக்கத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு, இந்த நில உலகத்தைக் காட்டிலும் மோட்சலோகம் மிகவும் அருகிலே இருப்பதாகும். 353

4.ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

உண்மையை அறியும் அறிவு இல்லாதவர்களுக்கு மெய், வாய், கண், மூக்கு, செவிகளின் வழியாக அறியக் கூடிய ஐந்து வகையான அறிவுகளும் இருந்தாலும் பயன் இல்லை.

ஐயுணர்வு - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐவகை அறிவு; எய்தியக் கண்ணும் - அடைந்த போதும்;ப யன் இன்று-பயன் இல்லை. 354

5.எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எந்தப் பொருள் எந்தக் குணமுடையதாகத் தோன்றினாலும், அந்தப் பொருளின் உண்மையான தன்மையினை அறிந்து கொள்வதே அறிவுடைமை ஆகும்.


தி.-7